Powered By Blogger

Friday, September 30, 2011

முளைக்கட்டிய பயறு


பச்சை பயறு புரோட்டின் சத்து மிகுந்தது. அதை அப்படியே உபயோகிப்பதை விட, முளைக்கட்டி உபயோகித்தால் அதிக பலன் கிடைக்கும். முளைக்கட்டிய பயறில் வாயுத்தன்மை கிடையாது. எளிதில் சீரணமும் ஆகும்.

ஒரு கப் பச்சை பயிறை தண்ணீரில் குறைந்தது 12 மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி களைந்து எடுத்து, ஒரு மெல்லிய வெள்ளைத்துணியில் போட்டு, சிறு மூட்டை போல் முடிந்து, சற்று உயரமான இடத்தில் கட்டி மீண்டும் ஒரு 12 மணி நேரம் தொங்க விடவும். பின்னர் மூட்டையை அவிழ்த்துப் பார்த்தால் பயறு நன்றாக முளை விட்டிருக்கும். (குளிர் பிரதேசங்களில், பயறு முளை விட அதிக நேரமாகும். அந்த இடங்களில் வசிப்பவர்கள், மூடடையின் மேல் அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து விட்டு, மேலும் 10 அல்லது 12 மணி நேரம் வைத்திருக்கவும். அல்லது அந்த மூட்டையை, ஒரு பாத்திரத்திக்குள் வைத்து, மூடாமல் வைத்திருந்தாலும், முளை விடும்).

சென்னை போன்ற இடங்களில், முளைப்பயறு கடைகளிலேயே கிடைக்கிறது.

முளைக்கட்டிய பயிறை அப்படியே பச்சையாக, சாலட், பச்சடி ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள், இட்லி தட்டில் போட்டு, ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து உபயோகிக்கலாம். மைக்ரோ அவனில் வேக வைத்து எடுக்கலாம்.

வெந்த பயறை கூட்டு, பொரியல் ஆகியவற்றில் சேர்க்கலாம். அல்லது விருப்பமான எந்த உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

எளிமையான சுண்டல் குறிப்பு:

தேவையானப்பொருட்கள்:

முளைக்கட்டிய பயறு - 1 கப் (வேக வைத்தது)
மிளகாய் - 2
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எலுமிச்சம் பழச்சாறு - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் மிளகாய் (ஒன்றிரண்டாகக் கிள்ளி போடவும்), பெருங்காய்த்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வறுத்து, அத்துடன் பயறு, உப்பு போட்டுக் கிளறி விடவும் கடைசியில் எலுமிச்சம் சாறு, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

No comments:

Post a Comment